திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கடப்பாக்கம் ஊராட்சியில் சிறு பழவேற்காடு, ஆண்டார் மடம், கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் மூன்று கிராமங்களுக்கு இடையே சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உவர்ப்பு தன்மை உள்ள நிலமாக கருதப்படும் அரசு சொந்தமான நிலம் இருந்து வருகிறது. அங்கு கிராம மக்கள் ஒரு போக அளவில் பயிர் செய்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் அப்பகுதி சுற்று வட்டார மக்களும் தங்களது சொந்த பட்டா நிலத்தில் பயிர் செய்து வருகின்றனர்.
மேலும் வட கிழக்கு பருவ காலங்களில் ஆரணி ஆற்று படுகையில் இருந்து வரும் உபரி நீரும் தத்தைமஞ்சி,கடப்பாக்கம் ஏரியில் இருந்து வரும் உபரி நீரும் இவ்வழியாக சென்று பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. இந்த நிலையில் இப்பகுதியில் இந்திய உப்பு நிறுவனம் சார்பில் உப்புத் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு திட்டத்தில் நடைபெற்று வரும் இப்பணிகளை கடந்த மே ஒன்றாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு பின் பொதுமக்கள் சென்று தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பொன்னேரிஇதனை கேள்விப்பட்டு பொன்னேரி வழக்கறிஞர்கள் அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக பொன்னேரி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உப்பு தொழிற்சாலை அமைக்கும் பணியினை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு